ஈழ தமிழர்கள் விவகாரம்! 11 ஆயிரம் கையொப்பங்களை நிராகரித்த பிரித்தானியா

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னிறுத்துமாறுக்கோரி, சுமார் 11ஆயிரம் பேர் கையொப்பம் இட்டு இணைய விண்ணப்பம் ஒன்று பிரித்தானிய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சு, பிரித்தானியாவின் வெளியுறவுக்கொள்கையின்படி சர்வதேச குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறலை, உண்மையை கண்டறிதல், நீதியை நிலைநாட்டல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் காண்பதற்கே, பிரித்தானிய அரசாங்கம் விரும்புகிறது என்று பிரித்தானிய அரசாங்கம் பதில் அளித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் அனைத்து சமூகங்களின் உதவியுடன் மேற்கொண்டுவரும் தேசிய நடைமுறைகளே சிறந்தவை என்று தாம் நம்புவதாகவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம், மனித உரிமைகளை நிலைநாட்ட எடுத்துள்ள முயற்சிகளை ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகம் வரவேற்றுள்ளமையையும் பிரித்தானிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கையின் உறுதிப்பாட்டுக்காக தமது அரசாங்கம் 8.3 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்கியுள்ளதாகவும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.