நீரில் மூழ்கிய தமிழர் தாயகம்! மீட்பு நடவடிக்கையில் இராணுவம்

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு(21) முதல் மழை பெய்து வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது.

இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றது.

இதனால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டதோடு ,படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள் வெள்ளம் புகுந்துள்ளமையால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மூன்றடிக்கு வான் பாய்கிறது. இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பதும் குறிப்பிடத்தக்கது.