யாழில் திடீரென அதிகரித்துள்ள டெங்கு அபாயம்!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூா்த்தி கூறியுள்ளார்.

இந்தாண்டில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 9 ஆயிரம் நோயாளர்களில் 1448 போ் டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்.மாவட்டத்தில் இந்தாண்டு மழை காலத்தின் பின்னர் ஏற்பட்ட நுளம்பு பெருக்கம் காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் தொகை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதனால் நோயாளர் அனுமதியும் அதிகரிக்கின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1100 நோயாளர்களை ஒரே தடவையில் பராமரிக்கும் வசதி காணப்படுகின்றது. இருப்பினும் கடந்த வாரம் நிலவிய மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்பட்ட நுளம்பு பெருக்கம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளா்கள் அதிகமானோர் குறுகிய காலத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக ஒரு விடுதியில் 40 படுக்கை வசதிகள் மட்டுமே காணப்படும் நிலைமையில் 50 முதல் 60 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கடும் பாதிப்புற்ற நோயாளர்களிற்கு கட்டில் வசதியை வழங்கி ஏனையோரை தரையில் அமர்த்தும் நிலமையும் காணப்படுகின்றது. குறிப்பாக இந்த மாதம் நோயாளர் தொகை சடுதியாக அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

இந்த வகையில் தற்போது நிலவும் மழையின் காரணமாக மேலும் நுளம்பு பெருக்கம் ஏற்பட்டால் இந்த நிலமை நீடிக்கும் என்றே கருதப்படுகின்றது.

இதனால் இதற்கான சிகிச்சை ஏற்பாட்டிற்கு நாம் தயார் செய்தாலும் தடுப்பு முறைகளை மக்களும் கருத்தில் கொள்வதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்றார்.