வெள்ள அனர்த்தம்: பிறந்த சில நாளேயான சிசுவும், தாயும் மரக்கிளையிலிருந்து மீட்பு!

அடைமழை, வெள்ளத்தால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் குளங்கள் நிரம்பி வான்பாய்ந்ததையடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இரண்டு மாவட்டங்களும் பெரும் அனர்த்த்தை எதிர்கொண்டன. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் 23,054 குடும்பங்களை சேர்ந்த 73,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

26 வீடுகள் முழுமையாகவும், 316 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டம்

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 2,778 குடும்பங்களை சேர்ந்த 4,724 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 436 குடும்பங்களை சேர்ந்த 1,428 பேர் 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

20 வீடுகள் முழுமையாகவும், 98 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவில், 7,520 குடும்பங்களை சேர்ந்த 24,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,929 குடும்பங்களை சேர்ந்த 6,075 பேர் 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

3 வீடுகள் முழுமையாகவும், 103 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன.

பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவில், 1,819 குடும்பங்களை சேர்ந்த 6,156 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 100 குடும்பங்களை சேர்ந்த 374 பேர் 4 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம்

ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில், 1,466 குடும்பங்களை சேர்ந்த 4,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 163 குடும்பங்களை சேர்ந்த 1,548 பேர் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவில், 3,688 குடும்பங்களை சேர்ந்த 11,468 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 1,037 குடும்பங்களை சேர்ந்த 2,817 பேர் 10 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில், 331 குடும்பங்களை சேர்ந்த, 1,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைத்துறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் 1,003 குடும்பங்களை சேர்ந்த 3,460 பேர் பாதிக்கப்பட்டனர். 3 வீடுகள் முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன.

மாந்தை கிழக்கு பிரதேசசெயலர் பிரிவில் 32 குடும்பங்களை சேர்ந்த 81 பேர் பாதிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்டம்

மன்னார் நகர் பிரதேசசெயலர் பிரிவில், 27 குடும்பங்களை சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நானாட்டன் பிரதேசசெயலர் பிரிவில் கடுமையான காற்றால் 12 குடும்பங்களை சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவில் 4,257 குடும்பங்களை சேர்ந்த 12,642 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடல் அலையால் இழுத்து செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

வவுனியா மாவட்டம்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவில் 132 குடும்பங்களை சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டனர். 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் இராணுவம், கடற்படை பெரும் பங்காற்றியிருந்தது. வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை படகுகளில் சென்று மீட்டெடுத்தனர். கரைத்துறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நித்திகைகுளத்திற்கு வயல் வேலைக்கு சென்றவர்கள் வெள்ளத்தால் சூழப்பட்டனர். அவர்களை மீட்கும்படி பிரதேசசெயலகத்தால் இராணுவத்திடம் கோரிக்கை விடப்பட்டதையடுத்து, படகுகளில் சென்ற இராணுவத்தினர் அவர்களை மீட்டெடுத்தனர்.

இதேவேளை, வெள்ளத்தில் சிக்கி பெரிய மரக்கிளையொன்றில் சிக்கியிருந்த பிறந்து சில நாள்களேயான சிசுவும், தாயும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.