கிளிநொச்சியில் ரணிலின் அறிவிப்பால் உச்ச மகிழ்ச்சியில் தமிழர்கள்

இயற்கை சீற்றத்தின் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு வருட இறுதிக்குள் இழப்பீடு!- பிரதமர் உறுதி

கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 31ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர், வடக்கு அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பல வாக்குறுதிகளை வழங்கிய பிரதமர், வெள்ள அனர்த்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தங்கவைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொழும்பு மாநகர சபையால் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்கான ஆளணி பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் அதற்கு படையினரை அழைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

மழை, வெள்ளத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையை கருத்திற் கொண்ட பிரதமர், நுண்கடன்களை அறவிடுவதை தாமதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

நுண்கடனை மீளப்பெற தற்காலிகத் தடை – பிரதமர் அறிவிப்பு!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்ற நுண்கடனை, வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் தற்போது நடைபெற்றுவரும் சிறப்புக் கூட்டத்தில் அறிவித்தார்.

பிரதமர் மேற் குறிப்பிட்ட விடயங்களை நடை முறைப்படுத்தினால் தமக்கு மகிழ்ச்சி என தெரிவிக்கும் மக்கள் அல்லது வழமை போன்று அரசின் முக்கிய அறிவிப்புக்கள் வெளியாவதும் பின்னர் அவை நடைமுறைப்படுத்தப் படாத சூழலும் இருப்பதான சூழ் நிலை வராத வகையில் அரச உத்தரவுகள் அமைய வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.