கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியில் ஏமாற்றம் கொடுத்த யாழ். மாணவர்கள்

இம்முறை வெளியான கபொத உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடமாகாண பாடசாலைகள், தேசிய ரீதியாக முன்னிலை பெறவில்லை என கல்விமான்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள பெறுபேறுகளுக்கு அமைய கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களை சேர்ந்த மாணவர்கள் தேசிய ரீதியில் முன்னிலை பெற்றிருந்தனர்.

எனினும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் எந்தவொரு பாடசாலையும் தேசிய ரீதியாக முனிலை பெறவில்லை. எனினும் மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்ட பாடசாலை முன்னிலை பெற்றுள்ளன.

நேற்று இரவு வெளியான பெறுபேறுகளுக்கு அமைய, கலைப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சிங்கராசா நிலக்சன் முதலிடம் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவி எஸ். சாம்பவி முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரியல் பிரிவில் ஸ்கந்தவரோதய கல்லூரி மாணவி ரவிச்சந்திரன் கலெக்சியா முதலிடம் பெற்றுள்ளார்.

பெளதீக விஞ்ஞான பாட பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் சண்முகராசா சஞ்சித் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய ரீதியில் முதல் மூன்று நிலைகளுக்குள் தெரிவான மாணவர்களில் தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்கள் இருவர் காணப்படுகின்றனர்.

சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ரிஸா மொஹமட், தொழில்நுட்பவியல் பிரிவில் தேசிய ரீதியாக இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மாத்தளை சாஹிரா கல்லூரி மாணவன் ஹக்கீம் கரீம் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.