வணிகத் துறையில் உயர்ந்த ஒரு நிலையை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு!

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ எடுத்த போதும் நான் விஞ்ஞானப் பிரிவையோ, கணிதப் பிரிவையோ உயர் தரத்துக்குத் தெரிவு செய்யாமல் வணிகக் கல்வியில் எனக்கு இருந்த ஈடுபாட்டால் வணிகப்பிரிவைத் தெரிவு செய்தேன்.

அத்துறையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது என உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் வணிகப் பிரிவில் 3ஏ பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மட். வின்சன் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி நவநீதன் கிருசிகா தெரிவித்துள்ளார்.

வணிகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி ந.கிருசிகா இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தனக்கு வணிகப் பிரிவில் இருந்த விருப்பத்தால் தான் சாதாரணதரப் பரீட்சை முடிந்ததும் பெறுபேறு வெளியாகும் வரை AATக்கு சென்று கற்றேன். AAT பரீட்சையில் தேசிய ரீதியாக முன்னிலை வகித்து சாதனை படைக்கக் கூடியதாக இருந்தது.

அப்போதே எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது உயர்தரப் பரீட்சையிலும் நல்ல பெறுபேற்றைப் பெறலாம் என்று அதற்காக முயற்சித்தேன். அந்த முயற்சி எனக்கு வெற்றியைத் தந்துள்ளது. அதனால் மாவட்ட மட்டத்தில் என்னால் 3ஏ பெற்று முதலிடம் பெற முடிந்துள்ளது.

நான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு பலர் ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளனர். அந்த வகையில் இறைவனது ஆசியுடன் எனது தாய் தந்தையர் கடுமையாக உழைத்தனர். இந்த நிலைக்கு ஆக்குவதற்கு அவர்கள் பெரும் அர்பணிப்புக்களைச் செய்துள்ளனர்.

அவர்கள் இல்லாவிட்டால் என்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. அதே போன்று எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிய பாடசாலை அதிபர் ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

குறிப்பாக இலங்கேஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய ஆசிரியர்கள் எனது வெற்றிக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களது முயற்சியும் எனது இந்த வெற்றிக்கு காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.