இலங்கை சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லக்சபான நீர்வீழ்ச்சியில் நீராடிய நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய நாட்டைச்சேர்ந்த கருப்பினத்தவரான 29 வயதுடைய ஓல்டி பூபோ இயய்பெம் ஒசுனியா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது காதலியுடன் இலங்கை சென்றிருந்த குறித்த வெளிநாட்டு பிரஜை நோட்டன் பிரிட்ஜ் சப்தகன்னியா மலைத்தொடரை பார்வையிட்டப்பின்னர் மாலை 2 மணியளவில் லக்சபான நீர்வீழ்ச்சியில் நீராடிய போது சுழியில் சிக்குண்டு காணாமல் போயுள்ளார்.
அதன்பின்னர், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது, காணாமல்போன குறித்த நபர் நீரோடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






