பெண் வைத்திய அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணம்!

திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த ஏறாவூரைச் சேர்ந்த பெண் வைத்திய அதிகாரி சிகிச்சை பயனற்றுப்போன நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய இரு குழந்தைகளுக்குத் தாயான மர்சூக்கா றிஸ்வி (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர்.

சமீப சில நாட்களுக்கு முன்னர் திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கொழும்பு தனியார் வைத்தியசாலை என்பவற்றிலும் இறுதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

களனிப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் 7வது தொகுதியில் மருத்துவராக வெளியேறிய மர்ஹும் மர்சூக்கா அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலை ஆகியற்றிலும் அவர் சுகவீனத்திற்குள்ளாகும் வரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் 2ஆம் தர வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றினார்.

இவர் ஏறாவூரின் வைத்தியத்துறை வரலாற்றில் 3வது பெண் அரசாங்க வைத்தியராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஏறாவூருக்கு எடுத்து வரப்பட்டு ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நல்லடக்கத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், ஊர்ப்பிரமுகர்களும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.