நான் அமைச்சை எடுத்தமைக்கு துரோகி பட்டம் சூட்டினார்கள்! ஆனால் இன்று…

கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வியாழேந்திரன் வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சை எடுத்தமைக்கு துள்ளி குதித்து துரோகி பட்டம் சூட்டும் அளவுக்கு சென்றார்கள்.

இன்று ஊருக்கு ஒரு அமைச்சர் என்ற நிலை முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது. அது அவர்கள் அரசியல் சாணக்கியம்.

அவர்கள் இந்த நாட்டை யார் ஆண்டாலும் தங்கள் இனத்தை வாழ வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இராஜதந்திரமாக செய்து வருகிறார்கள்.

அவர்கள் அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையையும் இழக்கவில்லை. ஆனால் கிழக்கில் எம் மக்களின் நிலை? இரண்டு அற்ற நிலைக்கே தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்த வருடம் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தை அடுத்து ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களுக்கு தமிழ் தலைமைகள் முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.

அதிலும், ஜனாதிபதி தன்னுடைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாவிடினும் எதிர்க்க வேண்டாம் என்று கூறியும் தமிழ் தலைமைகள் அதனை எதிர்த்தன.

ஒருவேளை இதன் பிரதிபளிப்பாகவே இன்று ஜனாதிபதி இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்தாரா? அல்லது சிறிலங்கா சுதந்திர கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நிலையில் இப்பதவியை வழங்கினாரா? என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.

உண்மையிலேயே இன்று கிழக்கு தமிழர்களின் இருப்பு என்பது கேள்விக்குள்ளான நிலையில் தான் இருக்கிறது. இதற்கு தமிழ் தலைமைகளே பதில் சொல்லி ஆக வேண்டும்.

தேசியம் தேசியம் என்று மாத்திரம் பேசிக்கொண்டிருந்தால் அது எமது மக்களுக்கு முழுமையான தீர்வை தராது. உரிமை சார்ந்த அரசியலுடன் எமது மக்கள் தினமும் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

கிழக்கில் இன்று எத்தனையோ அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை தமிழர்களுக்கு கிடைப்பது என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்துள்ளது.

இதை எவ்வாறு எமது மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை பெற்றி சிந்திக்க வேண்டும். இதன்படி, ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நாம் எமது மக்களுக்குபெற முடிந்த சிலவற்றையேனும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது தீர்மானம்.

நாம் அரசியல் ரீதியாக ஒரு கல் எறிந்தால் நம்மை பல கற்கள் கொண்டு தாக்கும் அளவுக்கு தென்னிலைங்கை மாறியிருக்கிறது.

இதற்கு தமிழ் தலைமைகள் எடுக்கின்ற பல தீர்மானங்களே காரணமாகவுள்ளது. எனவே, இனிவரும் காலங்களிலாவது கிழக்கு தமிழர்களின் இருப்பு குறித்து கூட்டமைப்பு உட்பட்டு தமிழ் தலைமைகள் நினைவில் வைத்து செயற்படும் என நான் நினைக்கின்றேன்.

எது எப்படியோ ஆளுநர் நியமன விடயத்தில் ஜனாதிபதிக்கு நான் முழுமையான அழுத்ததைகொடுத்து எமது கிழக்கு மக்களின் இருப்பை காப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பேன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.