புலிகளின் பேச்சுவார்த்தையை கேள்விக்குட்படுத்தும் நோர்வேயின் பிரதி மேயரான ஈழத்தமிழ் பெண்

விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு பெண்ணுக்கேனும் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என நோர்வே, ஒஸ்லோ மாநகராட்சியின் பிரதி முதல்வரான ஈழத்தைச் சேர்ந்த கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவானமைக்கு நல்ல காரணம் ஒன்று உள்ளது. அவர்கள் துப்பாக்கி தூக்கியதற்கும் காரணம் உண்டு. ஆனால் இப்போது நாங்கள் போராடும் விதத்தை மாற்ற வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் களத்திற்குச் சென்று போர் புரிந்தனர், விமானம் ஓட்டினர், ஏன் விமானத்தைக் கூட திருடினர், ஆனால் பேச்சுவார்த்தை நடக்கும்போது அந்த மேசையைச் சுற்றி ஒரு பெண் கூட இல்லை.

ஜனநாயகமாக போராடுவதென்றால் ஜனநாயகமாகத்தான் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ளாவிடில் அது போராட்டம் அல்ல. அது ஒரு மக்களுக்கான போராட்டம் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று இவற்றுள் ஆண், பெண் வேறுபாடு என்பது இல்லை என அவர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.