வவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : சத்தியலிங்கம் கோரிக்கை!!

வவுனியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக் கழகமாக தரமுயர்த்துவது தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாணம் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் ரவூக் ஹக்கீமை சந்தித்த போதே இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்.

கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவரும் நிலையில் பலரது வேண்டுகோளிற்கமைய வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த உயர்கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

உயர்கல்வி அமைச்சருடனான சந்திப்பில் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மோகன், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.