கொழும்பில் ஐரோப்பிய நாட்டவர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

ரயில் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேரம் வீதி, கல்கிசை ரன்வெலி ஹோட்டலுக்கு அருகிலுள்ள புகையிரத வீதியில், அளுத்தகமவிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பரிசோதனை ரயிலிலேயே குறித்த வெளிநாட்டவர் மோதுண்டுள்ளார்.

ரயில் மார்க்கத்தில் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட ரயிலுடன் மோதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வெளிநாட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நபர் 67 வயதுடைய, இதாலி நாட்டு பிரஜை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுபோவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.