நாடாளாவிய ரீதியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சேனா படைப்புழுவின் தாக்கம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயிர் வகைகளில் சேதத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சேனா படைப்புழு கடந்த ஒக்டோபர் மாதத்தில் அம்பாறை மாவட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோளப் பயிர்களின் இலை மற்றும் பொத்தியின் நறுமணமே இந்த புழுக்களை ஈர்ப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம். வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுங்கு பயிரையும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கோவா போன்ற மரக்கறி வகைகளையும், கிளிநொச்சி மாவட்டத்தில் வாழை மரங்களையும், கோப்பி போன்ற பயிர்களையும் இந்தப் படைப்புழு தாக்கியிருக்கிறது.” என்றார்.
மேலும், இந்த படைப்புழுவை அழிப்பதற்கு ஏழு வகையான கிருமிநாசினிகள் தெரிவு செய்யப்பட்டு, அவை எந்தவித படைப்புழுக்களை அழிப்பதிலும் தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுவருவதாகவும் விவசாயத் திணைக்களத்தின் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் முதன்முதலாக இந்த படைப் புழுவின் தாக்கம் குறித்து வெளியான இந்தச் செய்தி விவசாயத்தையே நம்பியிருக்கும் பல தமிழ் குடும்பங்களுக்கு பேரிடியானதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






