காதலிக்கப் போறீங்களா? உங்க ஜாதகத்தில் சுக்கிரன் எங்க எப்படி இருக்காருன்னு பாருங்க!!

காதலிக்கப் போறீங்களா? உங்க ஜாதகத்தில் சுக்கிரன் எங்க எப்படி இருக்காருன்னு பாருங்க!!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன… ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் பேசப்பட்ட நிலை போய், லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று மேட்ரிமோனியலில் தேடும் காலம் வந்து விட்டது. ஒரு சிலரோ தனக்குரியவரை சட்டென்று சந்தித்து பார்வையால் பேசி காதலித்து அதே வேகத்தில் திருமணம் செய்து கொள்வார்கள்.
லட்சங்களை செலவு செய்து கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தாலும் அதை போற்றி பாதுகாக்காமல் பாதியில் ரத்து செய்து விட்டு போகும் நிலையும் இன்றைக்கு இருக்கிறது. என்னதான் தேடித் தேடி திருமணம் செய்து வைத்தாலும் புரிதல் இல்லாத வாழ்க்கை மண வாழ்க்கையில் தம்பதிகளிடையே கசப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.
ஜாதகத்தில் கட்டம் சொல்வது என்ன?

திருமண வயதில் மகனையோ, மகளையே வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு 20 வயதை கடந்து விட்டாலே ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு வரன் தேட கிளம்பிவிடுவார்கள். சில குழந்தைகளோ பெற்றோர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தாங்களே தங்களுக்கு ஏற்ற ஜோடியே தேடி காதலித்து பெற்றோரிடம் கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் காதல் திருமணங்கள் சகஜமாகிவிட்டது. ஜாதி, மதம் மாறி திருமணம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம்தொழில் மற்றும் வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று வாழும் சூழ்நிலை இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது.

தொழில் நுட்ப வளர்ச்சி
தகவல் தொழில் நுட்ப சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்றவை மக்களிடையே பிரபல்யமாகி விட்ட சூழ்நிலையில், யாரையும் அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நொடி கணக்கில் தொடர்பு கொண்டு விடலாம் . ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், வீடியோ கால் என அறிவியல் வளர வளர ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் அதிகமாக அதிகமாக காதலிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகின்றது.

பெற்றோர்களின் கவலை
இன்றைக்கு இளையதலைமுறையினர் படிப்புக்காகவும், வேலைக்காகவும் சொந்த ஊர், நாட்டை விட்டு பிற ஊர், பிற நாடு என்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் ஏராளம் என்பதால் பெரும்பாலான பெற்றோர்களின் மனக்கவலை நம்முடைய பையனுக்கு அல்லது பெண்ணுக்கு நாம் பார்த்து வைக்கும் திருமணமா அல்லது அவர்களே தங்களுக்குரிய ஜோடியை தேர்ந்து எடுத்து கொள்வார்களா என்பதுதான். எனவேதான் ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்கும் போதே தெளிவாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

கிரகங்களின் சேர்க்கை
காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா என்பதல்லாம் பிறக்கும் போது கிரகங்கள் நின்ற நிலையும், சேர்க்கையும், பார்வையையும் பொறுத்து அமையும். சில கிரகங்களுடைய சேர்க்கையும், பார்வையும், இருப்பிடமும் கண்டிப்பாக அந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ காதல் திருமணம் தான் நடக்கும். யார் தடுத்து நிறுத்தினாலும் அந்த திருமணம் நடந்தே தீரும். ஆனால் காதல் திருமணத்திற்கு உரிய கிரகங்கள் சாதகமாக இல்லாத பட்சத்தில் காதல் திருமணம் நடந்தாலும் அந்த காதல் திருமணம் நீடித்து நிற்காது. ஒருவருடைய பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருந்த நிலை கொண்டு அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து அவருக்கு எத்தகைய திருமணம் மகிழ்ச்சியை தரும் என்பதை தீர்மானித்து விடலாம்.
களத்திர ஸ்தானம்
ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் வீடு, களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.

புத்திரகாரகன் குரு
ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர் குருபகவான். இவர் யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றாலே சூத்திரதாரி. அதாவது ஒரு செயலைச் செய்பவர் அல்லது செய்யச் சொல்லி தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.
காம காரகன் சுக்கிரன்
சுக்கிரன்தான் காதலின் ஏகபோக பிரதிநிதி. சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு அதிபதி ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர். ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர்.

மனதின் அதிபதி சந்திரன்
நிலவைப் பார்த்து காதலர்கள் அதிகம் லயிப்பதற்குக் காரணம் சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டே அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.

வீரியம் தரும் செய்வாய்
செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.
நரம்புகளின் அதிபதி புதன்
புதன்தான் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.


கட்டங்களில் கிரகங்கள்
ஒருவருக்கு காதல் ஜெயிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12ம் வீடுகள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். காதலுக்கு வீரம் அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் வீடு தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரத்தையும் வீரியத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
3ம் வீட்டில் கிரகங்கள்
3ம் வீட்டில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய தசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.
சுகஸ்தானத்தில் கிரகங்கள்
ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம்.

ஒருத்தனுக்கு ஒருத்தி
நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் அல்லது காதலியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
காதல் ஜெயிக்குமா?
ஓருவரின் ஜாதகத்தில் 7ம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும்.

இனிக்கும் காதல்
இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும்.

தடம் மாறும் காதல்
ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.
ரகசிய காதல்
குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.
காதல் தோல்வி
ஒருவரின் ஜாதகத்தில் 12ம் இடமான அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.
காதல் வேட்கை அதிகம்
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ள ஜாதகருக்கு காதல் வேட்கை அதிகம் இருக்கும். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்.காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
மனம் மாறும் காதலர்கள்
சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது.
வயதில் மூத்த காதலி
ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும்.
இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.