முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பிக்க உள்ள புதிய அரசியல் கட்சியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள சிலர், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் அவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடுமையாக எதிர்த்து வருகிறார்.
மைத்திரி – மகிந்த கூட்டணியை எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்களில் பலர் சந்திரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கி அவருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் அமைப்பை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அதிருப்தியாளர்கள், முன்னாள் ஜனாதிபதி ஆரம்பிக்கும் புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.






