யாழ் பல்கலை மாணவர்கள் இடையே மோதல் பதற்றத்தில் பல்கலைக்கழக சூழல் !!

யாழ் பல்கலை மாணவர்கள் இடையே மோதல் பதற்றத்தில் பல்கலைக்கழக சூழல் !!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழலில் வெசாக் தினத்திற்காக வெளிச்சக் கூடுகளைக் கட்டமுயன்ற புதுமுக மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் நேற்றைய தினம் பல்கலைக்கழக சூழலில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
வெசாக் தினத்தினை முன்னிட்டு பௌத்த மதம் சார்ந்த புதுமுக மாணவர்கள் வெளிச்சக் கூடுகளைத் தயார் செய்து அதற்கான மேலதிக அலங்காரத்தை யாழ். பல்கலைக்கழக சூழலில் மேற்கொள்ள முயன்றனர்.
இவ்வாறு புதுமுக மாணவர்கள் குறித்த அலங்காரத்தை மேற்கொள்ள முயல்வதனையறிந்த சிரேஷ்ட மாணவர்களில் உள்ள பௌத்த மாணவர் கள் குறித்த அலங்காரத்தினை தாமே மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இதனால் குறித்த விடயத்தில் சர்ச்சை ஏற்படவே இரு தரப்பும் இணைந்து குறித்த நிகழ்வினை மேற்கொள்ளுமாறு நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் சில சிரேஷ்ட மாணவர்கள் தாமே அலங்காரங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ள நிலையில் நேற்று மாலையில் புதுமுக மாணவர்கள் இப்பணியை மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

இதற்காக பல வெளிச்சக் கூடுகளையும் அவர்கள் தம்மோடு கொண்டு வந்தனர். இதன்போது அவ்விடத்திற்கு வந்த சிரேஷ்ட மாணவர்கள் கொதிப்படைந்து புது முக மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பின்னர் சமரசத்துடன் அப்பகுதியை விட்டு மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.