யாழ் எழுத்தாளருக்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய கெளரவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன், இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமியின் ”பிரேம்சந்த் பெலோஷிப் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை எழுதிய எழுத்தாளரான ஐயாத்துரை சாந்தனை 2017 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமியின் விருது பெற்றமைக்காக, டெல்லி தமிழ் சங்கம் தனது உயரிய பாராட்டையும் கௌரவத்தையும் அவருக்கு வழங்கியது.

இந்த கௌரவிப்பு நிகழ்வு, கடந்த சனிக்கிழமை முன்னை நாள் யாழ் இந்திய துணைத் தூதுவரும், இந்திய மத்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட் மற்றும் விசா துறையின் இயக்குனர் அ . நடராஜன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

ஐயாத்துரை சாந்தன், ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுவதுடன் மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார்.

அத்துடன், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை ஐயாத்துரை சாந்தன் எழுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் தலைமை தாங்கிய முன்னைநாள் யாழ் இந்திய துணைத்தூதுவர் A . நடராஜன் கருத்துரைத்த போது, ஒரு கிராமத்தில் பிறந்த எழுத்தாளன் தன்னுடைய முகவரியை தேடத் தொடங்கினான். அவன் முகவரி புலப்படவில்லை. மேலும் மேலும் நூல்களை எழுதுகிறான்.

இப்படி அவன் நூல்களை எழுதி ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் தான் நினைத்த பீடத்தை அடைகிறான். அந்த பீடத்தை அடைந்தவன், தன் முகவரியை தேடியவன் வேறு யாரும் இல்லை எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன் என்று அவர் பாராட்டி பேசியுள்ளார்.