தமிழர் பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளான பெண்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார், பேசாலையைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவரே தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி இவ்வாறு நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த பெண் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் தங்களை புலனாய்வாலர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சந்தேகத்திற்கு இடமான சிலர் வீட்டுக்குள் நுழைய முற்பட்டனர்.

இதன் போது தாம் கதவை திறக்க மறுத்ததாகவும், பின்னர் குறித்த நபர்கள் கதவை உடைக்க முற்பட்ட போது தாம் பயத்தில் கதவை திறந்ததாகவும், 9 பேர்கள் தங்கள் வீடு முழுவதும் சூழ்ந்து கொண்டு வீட்டுக்குள் ஆயுதம் புதைக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதாகவும், உடனே தான் அச்சத்தில் சத்தம் இட்டு கத்தியதால் அக்கம் பக்கதினர் மற்றும் அருட்தந்தை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

தங்களது வீட்டில் போதைபொருட்கள் உள்ளனவா என சோதனை செய்வதற்காக தாம் வந்ததாக சந்தேகநபர்கள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக குறித்த பெண்ணின் வீட்டின் மீது அடையாளந்தெரியாத நபர்களால் இரவு நேரங்களில் கல் வீசப்படுவதும் கண்ணாடிகள் உடைக்கப்படுவதும் கதவை தட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சந்தேகமடைந்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பேசாலை பாடசாலைக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் குறித்த பெண்னின் கணவன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

குறித்த நபர் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்திலும் தற்போது மன்னார் நீதவான் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது.

குறித்த பெண்ணின் கணவன் காணாமலாக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் 15ஆம் திகதி மன்னார் மேல் நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.