பஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விபத்துக்களைக் குறைக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

சிலாபம் – மஹாவெவ பகுதியில் கடந்த 18 ஆம் திகதி பேரூந்து ஒன்று வேகக் கட்டுப்பட்டை மீறி பயணித்து விபத்து உள்ளாகி 3 பேர் பலியாகியதுடன், 19 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மின்மாற்றி மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்தச் சம்பவத்தில் குறித்த பேரூந்து சாரதி அதிக வேகத்துடன் பேரூந்தை ஒட்டி சென்றமையே காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவது சம்பவிக்கும் பேரூந்து விபத்துக்களுக்கு முக்கிய காரணம் அதிகவேகம் என்பதனால், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர, அதிக வேகத்துடன் பயணிக்கும் பேரூந்துகள் தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறையிட முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.