மகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. அந்த வகையில் மகா சிவராத்திரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

பகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுததிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது.

பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது.

ஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி
கடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த சமயத்தில் அதில் இருந்து வெளிப்பட்ட நஞ்சினை சிவபெருமான் உண்டு இந்த உலகை காத்த கதை நாம் அறிந்ததே. இதன் காரணமாக தேவர்கள் சதுர்த்தசியன்று அன்று சிவனை வணங்கி அவருக்கான பூஜையை செய்தனர். அந்த நன்னாளே மகா சிவராத்திரி என்று சிலர் கூறுவதுண்டு.

இதையும் படிக்கலாமே:
மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா ?

சிவராத்திரி அன்று சிவனை நோக்கி விரதம் இருந்து வழிபடுவோருக்கு சிவனின் அருள் மட்டுமின்றி அவர் உடலில் சரிபாதியாய் வீற்றிருக்கும் பார்வதிதேவியின் பரிபூரண அருளையும் நாம் பெற இயலும். முருகப்பெருமான், குபேரன், இந்திரன் உள்ளிட்ட பலர் சிவராத்திரி அன்று விரதம் இருந்து பல அறிய சக்திகளை பெற்றனர் என்று கூறப்படுகிறது.