வட மாகாணத்தை நோக்கித் திரும்பியது சீனாவின் பார்வை!

இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் தலைமன்னார் இறங்குதுறைப் பகுதியினை சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் 6ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் ஆறு சீன தூதரக அதிகாரிகள் குழு பயணம் செய்தது. இதன்போது வடக்கின் முக்கியமான இடங்களை அக்குழுவினர் பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தப் பயணத்தின் போது தலைமன்னாரில் உள்ள வடமேற்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்த சீன அதிகாரிகள் குழு, இலங்கை கடற்படையினருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக்கு நீரிணையில் இலங்கை கடற்படையின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர் என பாதுகாப்புத்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, தலைமன்னார் இறங்குதுறைப் பகுதியைச் சென்று பார்வையிட்ட சீன தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள், இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மூலம், இந்திய கடல் எல்லைப் பகுதிக்கும் சென்றனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள எல்லையில் அமைந்துள்ள மணல் திட்டுகளையும் பார்வையிட்ட சீன அதிகாரிகள் அவற்றைப் படம்பிடித்துக் கொண்டதாகவும் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போருக்குப் பின்னர் வடக்கின் அபிவிருத்தியில் இந்தியா கவனம் செலுத்திவருகின்றது. அதேபோன்று தெற்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகளவில் உள்ள நிலையில், வடக்கு நோக்கி சீனா தன்னுடைய பார்வையை திருப்பியிருப்பது இந்திய சீன ஆதிக்கப்போட்டி இலங்கையின் வடக்கில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இதனைப்பார்க்கப்படுகிறது.