பூசகர் ஒருவர் உள்ளிட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த ஐவர் அதிரடியாக கைது!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த ஐவர் உள்ளிட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பூசகர் ஒருவரும், தென்னிலங்கை பாதாள உலக குழுவை சேர்ந்த ஏழு பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில், வடக்கில் புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அவற்றை பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்யும் சட்ட விரோத நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து உளவுத் துறையினர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொடுத்த உளவு அறிக்கையை மையப்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பிரகாரம் குறித்த விசாரணைகளை சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவர் உட்பட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்த 5 பேரும், பாதாள உலக குழுவை சேர்ந்த ஏழு பேருமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.