ஆபத்தான இரகசியத்தை கையில் எடுத்தார் மஹிந்த! கதிகலங்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

இலங்கையில் ஆபத்தான பொருளான கொக்கொய்ன் போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் தொலைபேசி வாயிலாக இந்த கோரிக்கையை மஹிந்த விடுத்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி ரஞ்சனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மஹிந்த தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்தினை தொடர்ந்து ரஞ்சன் ராமநாயக்கவிடம் மஹிந்த விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அண்மைக்காலமாக ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அந்தத் தகவல்களை தன்னிடம் தருமாறு மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்தவின் கோரிக்கைக்கு இணங்கிய ரஞ்சன், எதிர்வரும் நாட்களில் தருவதாக உறுதி அளித்துள்ளார்.

விரைவில் பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளின் பலவீனங்களை மஹிந்த சேகரித்து வருகிறார்.

விரைவில் இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் தேர்தல் மேடைகளில் பேசும்பொருளாக மாறவுள்ளது.

இதற்கான முன்னாயத்தங்களை இப்போதே மஹிந்த முன்னெடுத்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக பல அரசியல்வாதிகள் கலக்கம் அடைந்துள்ளதாகவும், எவ்வாறு தேர்தல் களத்தில் மக்களை சந்திப்பது என்பது தொடர்பான அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமகால நாடாளுமன்றத்தில் பெண் அரசியல்வாதிகள் உட்பட இருபத்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொக்கொய்ன் போதைப்பொருள்ளை பயன்படுத்தி வருவதாக ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.