கணவனை மீட்டுத்தாருங்கள்; குழந்தைகளுடன் பரிதவிக்கும் தமிழ் பெண்!

கொழும்பில் இருந்து கல்லடி, திருச்செந்தூர்க்கு வந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லடி, திருச்செந்தூர் கடற்கரை வீதி, ஐந்தாம் குறுக்கினை சேர்ந்த ரெ.பத்மநாதன் என்ற 55 வதுயடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

தனது கணவர் கொழும்பில் மேசன் வேலை செய்து வருவதாகவும், மாதாந்தம் வீட்டுக்கு வந்துசெல்வதாகவும் கடந்த வியாழக்கிழமை வீட்டுக்கு வருவதற்காக பஸ் நிலையம் சென்றவர்தான் காத்தான்குடி வான் ஒன்றில் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக கூறியதாகவும் காணாமல்போனவரின் மனைவி தெரிவித்தார்.

எனினும் மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்ற நிலையில் அவர் இதுவரையில் வீடு வரவில்லையெனவும், அவரது தொலைபேசியும் நிறுத்தி வைக்க்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்தார்.

தனது புதல்வனின் பிறந்த நாளைக்கு வருவதாக கூறியவர் இதுவரையில் வீடு வந்து சேராத நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ள போதிலும் இதுவரையில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தனது கணவரை மீட்டுத்தர உரியவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.