சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் கூறப்பட்டது என்ன?

இலங்கையின் அனைத்து சனத் தொகையினரும் மனித உரிமைகளை அனுபவிக்க வழி செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சற்று முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40ஆம் அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான தீர்மானமொன்று சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட சில நாடுகளினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை ஆகியனவற்றை இலங்கையில் மேம்படுத்தல்” என்ற தொனிப் பொருளில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சனத்தொகையினரும் மனித உரிமைகளை அனுபவிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்தைச் சாரும் என தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2018ம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைமைகளின் போது அமைதியான தீர்வினை எட்டுவதற்கு ஜனநாயக நிறுவனங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தை பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது