செல்ஃபி எடுக்க முயன்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை..!

‘செல்பி‘ எடுக்க முயன்றவரை, யானை ஒன்று தும்பிக்கையால் வளைத்து தூக்கி வீசிய சம்பவம் இந்தியாவின் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசியில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மக்களிடம் ‘செல்ஃபி‘ எடுக்கும் கலாசாரம் மிக வேகமாக பரவி வருகிறது. பாம்பின் முன் நின்று ‘செல்ஃபி‘ எடுப்பது, ஓடும் ரயில் அருகே நின்று ‘செல்ஃபி‘ எடுப்பது, கடல் அலைகளில் நின்று ‘செல்ஃபி‘ எடுப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டு, பல உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், யானையுடன் ‘செல்ஃபி‘ எடுக்க ஆசைப்பட்ட ஒருவர், அந்த யானையால் தாக்கப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு,

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழை புன்னக்காடு தேவி கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் இரண்டு யானைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், கோயிலுக்கு வந்த புன்னப்புரை என்ற இடத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ரெனீஸ் (40) என்பவர், யானையுடன் ’செல்ஃபி’ எடுக்க ஆசைப்பட்டு அதன் அருகில் சென்றுள்ளார்.

அப்போது அந்த யானை, ரேனிஸை தந்தத்தால் குத்தியதோடு தும்பிக்கையால் அவரை வளைத்து தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்த ரெனீஸை, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழா அரசு வைத்தியக்கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அம்பலப்புழா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானையுடன் ‘செல்ஃபி‘ எடுக்க ஆசைப்பட்ட ஒருவர், அந்த யானையால் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.