சுமந்திரன் நேற்றைய அறிவிப்பால் கதி கலங்கும் தென்னிலங்கை

இலங்கையில் போா்க் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சா்வதேச நீதிமன்றுக்கு செல்வதில் தவறு இருக்கப்போவதில்லை. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கின்றாா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப் பிய கேள்விக்கு பதிலளித்த பொன்சேகா,

பாதுகாப்பு படைகளில் குற்றம் செய்தவர்கள் இருந்தால், தேசிய நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்க முடி யும். க டந்த காலங்களிலும் அப்படி நடந்துள்ளது.

கடந்த காலங்களில் குற்றம் செய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் விசாரணைகளை நடத்தாது அரசியலில் சிக்கிக்கொண்டுள்ளனர். குற்றம் செய்தவர்கள் ஓரிருவர் இருக்கின்றனர்.

அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். கிறிஸாந்தி குமாரசுவாமி, மன்னம்பேரி போன்ற பெண்களின் கொலையுடன் சம்பந்தப்பட்ட இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால், குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும். அதனை செய்யாத காரணத்தினால், சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றது.

வடக்கில் உள்ள மக்கள் அவர்களின் அரசியல்வாதிகளுக்கு இது சம்பந்தமாக அழுத்தங்களை கொடுத்திருத்திருக்கலாம்.

இந்த விடயத்தில் அரசியல் தலையீடு இன்றி குற்றம் செய்தவர்களுக்கு சட்டத்தை அமுல்படுத்தினால், இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போருக்கு பின்னர் நடந்த குற்றங்கள் தொடர்பானவை. யுத்தம் நடந்த போது செய்த குற்றங்கள் அல்ல.

போர் நடைபெற்ற போது குற்றங்களை செய்ய எவருக்கும் நேரம் இருக்கவில்லை. போர் முடிந்த பின்னர் நான் இராணுவத்தில் இருக்கவில்லை. போருக்கு பின்னர் பெரும் எண்ணிக்கையிலானோர் சரணடைந்தனர்.

அவர்களில் சிலருக்கு ஏதிராக குற்றமிழைத்ததாகவே குற்றம் சுமத்தப்படுகிறது. போர் நடைபெற்ற நேரத்தில் அப்படியான குற்றங்கள் நடந்திருந்தால், நான் 24 மணி நேரத்தில் தண்டனை வழங்கியிருப்பேன். அரசாங்கம் தண்டிக்கும் வரை நான் காத்திருக்கவும் மாட்டேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.

நாட்டில் நீதி நிலை நாட்டப்படவில்லை என்பதே இது காட்டுகிறது. உள்நாட்டில் நீதி கிடைக்காது போனால், எந்த பிரஜையாக இருந்தாலும் அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

அதனையே சுமந்திரன் பேசுகிறார் எனவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.