சுக்கிரன் தரும் ராஜயோகம் யாருக்கு?

வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மூலாதாரமாக இருப்பது பணம், பொருளாதாரம், இந்த இரண்டு நல்ல அமைப்பில் நமக்கு இடையூறு இல்லாமல் இருப்பதே பெரிய யோகமாகும்.

எல்லாவற்றிற்கும் தனம் எனும் பணமே பிரதானம். ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும் அந்த துறையில் மாபெரும் வெற்றியாளராக ஜெயித்து பொன், பொருள், ஆஸ்தி, சொத்து, புகழ் அனுபவிக்கும் பாக்கியம் அமைய வேண்டும் என்றால் சுக்கிரனின் தயவு, கருணை, அருள் வேண்டும். சுக்கிரன் அஷ்ட ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் வள்ளல். முக்கியமாக புகழ் பட்டம், பதவி, ஆடம்பரம், அதிகாரம் போன்றவற்றை அருள்பவர்.

ஒருவரை ஜொலிக்கும் நட்சத்திரமாக புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லும் வல்லமை மிக்கவர் கலை, இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம். போன்றவை எல்லாம்.

சுக்கிரனின் ஆதிக்கம், ஆளுமைக்குட்பட்டது. பணத்தை பல வகைகளில் முதலீடு செய்து அதை பல லட்சம் கோடிகளாக பெருக்கி சொத்துக்களாக மாற்றுவது சுக்கிரனின் சாகசமாகும். நிலம், எஸ்டேட், காபி, தேயிலை தோட்டங்கள் என்று பூமி யோகத்தை செவ்வாய் தருவார்.

ஆனால் வீடு, மாடமாளிகை, பங்களா, அடுக்குமாடிகள், மால்கள் போன்றவற்றை தருவது சுக்கிரனின் அம்சமாகும். தங்கம், வைரம், வௌ்ளி வியாபாரம், நவரத்தின தொழில்கள், அழகு நிலையங்கள், கார்கள், பேருந்துகள் வைத்து நடத்தும் டிராவல்ஸ். பெண்கள் விரும்பும் பேன்ஸி கடை, மிகப் பெரிய துணிக்கடை, ரெடிமேட், உள்ளாடைகள், அணிகலன்கள், ஐந்து நட்சத்திர ஒட்டல்கள், சூப்பர் மார்க்கெட், தங்கும் விடுதிகள், பெரிய உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், கலைப் பொருட்கள், மின்சார, மின்னனு சாதனங்கள் டி. வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி விற்கும் கடைகள். சிற்பங்கள், ஒவியங்கள், கம்ப்யூட்டரில் அனிமேஷன், விஷுவல் கம்யூனிகேஷன், போட்டோஷாப் போன்ற கலைகள், நிதி நிறுவனங்கள், வட்டி வியாபாரம், வாகனம் வீடு வாங்க கடன் தரும் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும்.

அ முதல் ஃ வரை எங்கும் எதிலும் பிரம்மாண்டமாய் இருப்பது சுக்கிரனின் அம்சமாகும். தையற்கலை, கைத்தொழில், ஆடை வடிவமைப்பு, கட்டிடங்களின் உள் அலங்காரம், செயற்கை கற்களால் செய்யப்படும் சாதாரண ஆபரணங்கள். வெண்மை நிறமான பொருட்கள். வெள்ளி, பிளாட்டினம், பால் பண்ணைகள், பால், தண்ணீர் சம்மந்தப்பட்ட பொருட்கள். தயிர், மோர், வெண்ணெய், நெய், வாசம் மிக்க மலர்கள் வாசனை திரவியங்கள் என எண்ணிலடங்கா சிறிய, பெரிய, மிக உயர்ந்த அனைத்து தொழில், வியாபாரங்கள், லாட்டரி, குதிரை பந்தயம் போன்ற சூதாட்ட விஷயங்கள் என எல்லாம் சுக்கிரனின் சாகஸங்களுக்கு உட்பட்டது.

சுக்கிரன் எந்தளவிற்கு ராஜ யோகம், சகல போக சுகத்தை அனுபவிக்கும் அமைப்பைத் தருகிறதோ அதே அளவிற்கு ரோகம் எனும் நோய்களைக் கொடுத்து எதையும் கெடுத்து விடும்.

இருந்தும் இல்லாத நிலையாக வாழ்க்கைப் பாதை மாறிவிடும். எந்த சுகத்தையும் அளவிற்கு அதிகமாக அனுபவிக்க வேண்டும் என்ற வெறி, காம இச்சை, போதை சுகம், வயது வித்தியாசமின்றி வரம்பு மீறிய உடல் உறவு வேட்கை காரணமாக உடல், நாடி நரம்புகள் தளர்ச்சி அடைந்து விடும்.

எல்லாவற்றிற்கும் மனம் ஏங்கும் ஆனால் உடல் ஒத்துழைக்காது. உடலில் சர்க்கரை, உப்புச் சத்து கூடுவதற்கு பலமில்லாத சுக்கிரன்தான் காரணம், கெட்ட கொழுப்பு, கண் பார்வை பிரச்னைகள், நிறபேதம், மாலைக்கண் நோய், தோல் நோய்கள், அலர்ஜி, உடலில் புண்கள் வந்தால் சீக்கிரம் ஆறாதது.

கட்டிகள், புண், அரிப்பு, தாழ் நிலை சர்க்கரை, அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல். பிறப்பு உறுப்புக்களில் பிரச்னைகள், வௌ்ளைப்படுதல், விந்து குறைபாடு, நீர்த்துப் போதல். நரம்புத் தளர்ச்சி, விந்து முந்துதல், சிறுநீரக நோய்கள், அடிக்கடிகல் சேருவது.

சிறுநீரக செயல் இழப்பு, டயாலிசிஸ், போன்ற பிரச்னைகளை சுக்கிரன் பலம் குறைந்த, நீச தன்மையில் 6,8,12. க்குடையவர்களுடன் சேரும் போது தருவார். முக்கியமான ஜனனேந்திர உறுப்புக்களை சுக்கிரன் ஆட்சி செய்வதால், அதில் குறைபாடுகள் பிரச்னை வரும் போது வாழ்க்கை நிலை குலைந்து போய் விடுகிறது.

வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப சுக்கிரனுக்குரிய வைதீக, சித்த, ரத்தின சாஸ்திர பரிகாரங்கள். ருண, ரோக, சத்ரு தோஷ பரிகாரங்கள். மணி, மந்திர, ஔஷத முறைகளை தெரிந்து உரிய நிவாரணம் பெறலாம்.