சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய்: மனநல மருத்துவர் ஷாலினி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் எனவும், அவரது கட்சியினர் யதார்த்த புரிதல்கள் ஏதுமின்றி நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் மனநல மருத்துவர் ஷாலினி.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சியின் சார்பில் 20 மக்களவை தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் அளித்திட வேண்டுமென்ற ரீதியில் நாம் தமிழர் கட்சியின் மேற்காண் செய்கை பல தரப்புகளாலும் வரவேற்கப்பட்டது.

அதே சமயம், மன நல மருத்துவர் ஷாலினி என்பவர், “இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்” என்ற ரீதியில், நாம் தமிழர் கட்சியின் 20 பெண் வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்த புகைப்படத்தினை பகிர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியினை உண்டாக்கிய சூழலில், ஷாலினிக்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் கிளம்பின.

இந்த நிலையில், தம் மீதான விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாலினி, சீமான் வாய் திறந்தாலே பொய்யாக பேசிவருகிறார். யதார்த்த புரிதல்கள் ஏதுமற்ற தொண்டர்களை உருவாக்கி வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.