இந்தியாவுக்கெதிராக பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு?!

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு பணியாளர்களால் கையாளப்பட்ட 103 கணக்குகளை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள அமைப்புகள் தொடர்பாக அவதூறு பரப்புவதற்காக பேஸ்புக் மேற்கொள்ளப்பட்ட நிலையிலையே குறித்த 103 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது,

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

காஷ்மீர் மாநில உரிமைகள், இந்திய அரசின் செயல்பாடு மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் தொடர்பாக அவதூறான தகவல்களும், கருத்துகளும் தற்போது பாகிஸ்தானில் இருந்து சமூக வலைத்தளங்களின் வாயிலாக அதிகமாக பகிரப்படுகின்ற நிலையில் பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் பேஸ்புக் குழுக்களில் பரப்பப்படும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபகாலமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

பாகிஸ்தானில் இருந்து போலியான பெயர்களில் தொடங்கப்பட்ட இதுபோன்ற சில கணக்குகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப்பிரிவுடன் (ISPR) தொடர்பு கொண்டிருப்பது கண்காணிப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தகைய போலி கணக்குகளில் சிலவற்றை சுமார் 28 லட்சம் பேர் பின்தொடர்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான அவதூறான போலி தகவல்களை பரப்பும் இந்த சமூக வலைத்தளப் பிரசாரம், பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரிகள் மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொடர்பா? அல்லது, ராணுவத்தில் பணியாற்றும் சிலரின் தனிப்பட்ட ஆர்வத்தினால் ஏற்படுத்தப்பட்ட தொடர்பா? என்பது இன்னும் தீர்மானமாக தெரியாத நிலையில் இதில் ஈடுபாடு காட்டிய நபர்களின் பெயர்களை ரகசியமாக வைத்திருக்க பேஸ்புக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவாளர்கள், அபிமானிகள், விசிறிகள், பொழுதுப்போக்கு அம்சங்கள், காஷ்மீரிகள் சமூகம் என்ற போலி பெயர்கள் மற்றும் அடையாளங்களுடன் இந்தியா மற்றும் இந்திய அரசுக்கு எதிரான விஷமத்தனமான பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இப்படி இன்ஸ்ட்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்த 24 (வலைப்பூ) பக்கங்கள், 57 பேஸ்புக் போலி கணக்குகள் மற்றும் 15 இன்ஸ்ட்டாகிராம் கணக்குகள் என பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவுடன் தொடர்புடையை 103 கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புத்துறையின் தலைவர் நாதனியேல் கிலெய்ச்செர் இன்று மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இணைப்புகள் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் முதல் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பகிரப்பட்ட சில தகவல்கள் சுமார் 1100 அமெரிக்க டாலர்கள் அளவிலான பணத்தை விளம்பர கட்டணமாக செலுத்தி வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.