பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய தொடருந்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் ஆகியன விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 17ம் திகதி வரை விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வழமையான சேவைக்கு மேலதிகமாக பதுளை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு விஷேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபையினால் முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகள் நாளை முதல் இடம்பெற உள்ளதாக, அதன் தலைவர் உப்பாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
வழமையான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக ஆயிரத்து 350 சேவைகளை மேலதிகமாக முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டிகைக்காலத்தில் புதிதாக மேற்கொள்ளப்படும், விசேட பேருந்து போக்குவரத்தினால் தமக்கு நட்டம் ஏற்படுவதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த வருடமும் தமக்கு நட்டம் ஏற்பட்டதாக, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.






