அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விரைவில் தனது பதவியைத் துறந்து, மீண்டும் தேர்தலுக்குச் செல்லவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா பொதுமக்கள் முன்னணி என்பனவற்றுக்குள் அரச தலைவர் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்னமும் தெளிவாக குழப்பமான நிலையை சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கிலேயே அரச தலைவர் இவ்வாறு பதவி துறக்கவுள்ளார் என்றும் பேசப்படுகிறது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவுக்கு வருகின்றது. அரச தலைவர் தேர்தலை இலக்குவைத்து சிறீலங்கா பொதுமக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன பரபரப்பாக இயங்கி வருகின்றன.
எனினும், அரச தலைவர் வேட்பாளர் குறித்து அந்தக் கட்சிகளுக்குள் உறுதியான நிலைப்பாடு எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது பதவியைத் துறக்கத் தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை அவர் தனது பதவியைத் துறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மைத்திரிபால சிறிசேன பதவியைத் துறந்தால் அடுத்த அரச தலைவர் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அவரே களமிறங்குவதற்கு அதிகளவாக வாய்ப்புக்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டு தேர்தல் பணியை, தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பிக்கவுள்ளதாக என்று மகிந்த தரப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளார். அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவும் நேற்றையதினம் தொடர் கலந்துரையாடலில் ஈடுபட்டது.






