திருமணத்திற்காக உறவினர் வீட்டுக்கு சென்ற 8 பேர் பரிதாப பலி; சோகமயமான திருமண வீடு!

திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற விபத்தில் இரு குழந்தைகள் ஆறு பெண்கள் என 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்,

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் சிலர் ஒரு வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.

வானா என்ற இடத்தின் வழியாக சென்றபோது சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்து சென்றது. அதில் சென்ற பலர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அருகாமையில் உள்ளவர்கள் அளித்த தகவலை அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இரு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்களின் பிரேதங்களை கைப்பற்றினர்.

காணாமல் போன 6 குழந்தைகளை மீட்க தேடுதல் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.