அவசர எச்சரிக்கை: கண்டிப்பாக வெளியில் நிற்கவேண்டாம்! பாதுகாப்பான இடங்களை நாடவும்!!

தென்னிலங்கையின் மாகாணங்கள் சிலவற்றுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இடி மின்னல் தொடர்பான கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

அதன்படி மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா ஆகிய ஐந்து மாகாணங்களுக்கே திணைக்களம் மேற்படி கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

அடுத்துவரும் நாட்களில் மேற்படி மாகாணங்களில் பலத்த மழை பெய்யவிருப்பதாகவும் இதனால் கடுமையான இடிமின்னல் தாக்கங்கள் காணப்படும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடிமின்னல் தாக்கத்திலிருந்து உங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ளலாம்?

இடிமின்னலின்போது மக்கள் அவசியமாக சில நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. அவையாவன,

1.மரங்களுக்கு கீழாக ஒருபோதுமே நிற்கவேண்டாம். கூடிய வகையில் பாதுகாப்பான இடங்களை தேடவும். எப்பொழுதும் வீடு அல்லது ஏதாவது கட்டடத்தின் உள்ளே இருப்பதையே உறுதிப்படுத்தவும்.

2.இடி மின்னலின்போது திறந்தவெளியான நெல்வயல்கள், தேயிலை முதலான பெருந்தோட்டங்கள், நீர் நிலைகளில் குளித்தல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

3.மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்களையும் தொலைபேசியையும் மின்னலின்போது பயன்படுத்துவதை முற்றாகவே தவிர்க்கவும்

4.திறந்த வாகனங்களான சைக்கிள், உந்துருளி மற்றும் கூரையற்ற வாகனங்கள், உழவு இயந்திரங்கள் போன்றவற்றிலும் படகுகள், மரக்கலங்கள் போன்றவற்றிலும் பிரயாணிப்பதை தவிர்க்கவும்.

5.விழுந்த மரங்களில் அறுந்த மின்னிணைப்பு உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.

6.அவசர நிலைமையின்போது பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊழியரை தொடர்புகொள்ளுங்கள்.