அடையாளம் காணப்பட்டுள்ள மட்டக்களப்பு குண்டு வெடிப்பு சம்பவ தற்கொலை குண்டுதாரி

மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடி 6ஆம் பிரிவு தைக்கா வீதியை சேர்ந்த முகமட் காசிம் முகமட் றில்வான் என தெரியவருகிறது.

இவர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர் எனவும், கடந்த 2007ஆம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் தொடர்புபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 12ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பிய இவர் கடந்த 16ஆம் திகதி காத்தான்குடியில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் 4 வயதுடைய ஒரு குழந்தையையும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் சந்தேகநபரின் மனைவி பாணந்துறைப் பகுதியில் வைத்து நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த பெண்ணின் (மனைவியின்) பெற்றோர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.