தெஹிவளையில் குண்டுத்தாக்குதல்! திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி

தெஹிவளையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறையை சேர்ந்த 24 வயதான பியுமி ஷானிகா சல்காது என்பவரே உயிரிழந்துள்ளார்.

விவசாய திணைக்களத்தில் உதவி முகாமையாளராக செயற்பட்ட இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

படிப்பில் சிறந்த நிலையில் காணப்பட்டவர், தொழிலுக்கும் மிகவும் அக்கறையுடன் சென்று வருவார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நுகேகொடை பிரதேசத்தில் வகுப்பறைக்கு சென்றிருந்தார்.

அன்று 11 மணியளவில் குண்டு வெடிப்பதனால் மகளுக்கு அழைத்து அவதானமாக இருக்குமாறு கூறினேன். பயப்பட வேண்டாம் அம்மா நான் படிக்கின்றேன் என மகள் கூறினார். சில மணி நேரங்களின் மீண்டும் அழைத்தேன் மகள் பதிலளிக்கவில்லை.

இறுதியாக அவரை சடலமாக வீட்டிற்கு கொண்டு வந்தனர் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தெஹிவளையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்திருந்தனர்.