வடக்கு மாகாண சபைக்கு முன்னால் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர்!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுக்கப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண சபைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு,மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் வடக்கிலும் தேவாலயங்கள்,பிரசித்தி பெற்ற இடங்கள் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.வடக்கு மாகாண சபை வளாகத்துக்கும் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை வளாகத்தில் பல திணைக்களங்கள் மற்றும் மாகாண அமைச்சுக்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.இவற்றிற்கு மக்கள் நாளாந்தம் வருகை தந்து சேவைகளை பெற்று செல்கின்றனர்.அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் பிரதி புதன்கிழமைகளில் வடக்கு மாகான ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெற்று வருவது வழக்கம்.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த பொதுமகள் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் வடக்கு மாகாண வளாகத்தை சூழ இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.