தற்கொலை குண்டுதாரிகளில் பெண்ணொருவர் உள்ளடங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றன.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புபட்டுள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளது.
அத்துடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.
தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச குழுக்களின் தலையீடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இது வரையில் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறை இது தொடர்பான விசாரணைகளுக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.






