சற்று முன்னர் யாழில் நபர் ஒருவர் அதிரடி கைது! பள்ளிவாசல்களும் பொலிஸாரால் சோதனை

யாழ்ப்பாண நகரில் சற்றுமுன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவர் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் வெளிநாடு ஒன்றில் தற்காலிகமாக வசித்துள்ளார். தற்போது இலங்கை திரும்பிய நிலையில் தனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு செல்லாது நேராக யாழ்ப்பாணம் வந்துள்ளார் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியதால் சந்தேகமடைந்த பொலிஸார் குறித்த நபரை சோதனை செய்ததோடு விசாரணையும் மேற் கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். ஆகவே அவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் பொலிஸார் சோதனையிட்டதுடன் விவரங்களை சேகரித்து வருவதாக அவற்றின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிவாசல்களுக்கு வருகை தந்த பொலிஸார், பள்ளிவாசலுக்கு வருகை தருவோர் தொடர்பான விவரங்களை வழங்குமாறு கோரியுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் முஸ்லிம் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவிருந்த நிலையில் பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் அந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.