மே 30 க்குள் மூன்று தேவாலயங்களும் மீள்நிர்மாணம் செய்யப்படும்

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான மூன்று தேவாலயங்களையும் மே மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள் நிர்மாணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுக்கும் உயரிய சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்கள் மீள் நிர்மாணம் செய்யும் வகையில் முப்படை பிரதானிகளுடன் பாராளுமன்றத்தில் நடத்திய கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிடிய புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றை முழுமையாக புனர் நிர்மாணம் செய்து விரைவில் கிறிஸ்தவ மக்களுக்கு கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் இப்போது நாசமாக்கப்பட்டுள்ள தேவாலையங்கள் மூன்றையும் மே மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள் புனர் நிர்மாணம் செய்து பொதுமக்களுக்கு மீண்டும் வழிபாடுகளுக்கு வழங்கப்படும் என்றார்.