தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெற நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை கைது செய்யப்பட்ட மாணவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டதான தகவல் அறிந்து உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவர்களை சந்தித்து பேசியுள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்து பேசியுள்ளேன்.
பல்கலைக்கழகத்திற்கு சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை. இராணுவமே ஈடுபட்டுள்ளது.
அதுவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த 25ஆம் திகதி விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த இரு மாணவர்களையும் இராணுவம் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாணவர் ஒன்றிய அறையிலிருந்து தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவை பயங்கரவாத சட்டத்தின் கீழ முதல்நிலை குற்றங்களாக தோன்றும் காரணத்தினாலும் கைது செய்த இராணுவம் பொலிஸாரிடம் ஒப்படைத்த காரணத்தினாலும் இந்த விடயத்தை நீதிமன்றில் பாரப்படுத்துவதாக பொலிஸார் கூறியுள்ளதுடன், நீதிமன்றம் எடுக்கும் தீர்மானத்தின்படி தாம் இயங்குவதாகவும் கூறியுள்ளனர்.
இதன்படி குறித்த மாணவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி கே.சயந்தன் ஆஜராகி பிணை விண்ணப்பம் கோருவார்கள்.
எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்க சட்டமா அதிபரின் இணக்கம் தேவை.
ஆகவே நான் இப்பொழுதே கொழும்புக்கு சென்று சட்டமா அதிபருடன் பேசி அவருடைய இணக்கத்தை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
அவருடைய இணக்கப்பாடு வரும்வரையில் மாணவர்கள் விளக்கமறியலில் இருக்க நேரிடும். காரணம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதிபதிக்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.






