யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற உத்தரதேவி விபத்து! பயணிகளின் நிலை?

யாழிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த உத்தரதேவி கடுகதி ரயில் கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த ரயில் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தனியார் பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை கழிவுகளை ஏற்றிச் சென்ற தனியார் உழவு இயந்திரம், குறித்த கழிவுகளை கொட்டிவிட்டு திரும்புகையில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனினும் சாரதி தெய்வாதீனமாக எவ்வித காயங்களும் இல்லாது உயிர் தப்பியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான பல விபத்துக்கள் குறித்த ரயில் கடவையில் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தகக்து.