யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிணை நிராகரிப்பு! காரணத்தைக் கூறி உத்தரவிட்ட நீதவான்!!

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரொன்றியப் பிரதி நிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நீதவானால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிணையினை வழங்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு கிடையாது என தெரிவித்த யாழ்ப்பாணம் நீதவான் ஏ.எஸ்.பி.போல் அதனை நிராகரித்து எதிர்வரும் 16ஆம் நாள்வரை குறித்த இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள குறித்த மாணவப் பிரதி நிதிகள் சார்பில் இன்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவினை ஆராய்ந்த நீதவான் இதுதொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அபிப்பிராயம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஆதலால் அவர்களுக்கு தற்பொழுது பிணை வழங்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை என்றும் தெரிவித்து நிராகரித்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 16ஆம் நாளுக்கு முன்னர் சட்ட மா அதிபரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்குமென நம்புவதாக மாணவர்கள் சார்பில் வாதாடும் சட்டத்தரணிகளில் ஒருவரான சுகாஸ் கனகரட்னம் தெரிவித்தார்.