ஜனாதிபதி தொடர்பில் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக மாணவன் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக பேஸ்புக்கில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அபேவிக்ரம வீரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மாணவன் நகைச்சுவையாக பேஸ்புக்கில் பதிவு இட்டதாகவும் அவருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இதுமிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலமே தவிர நகைச்சுவைக்கான காலம் அல்லவென கூறிய நீதிபதி பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.