யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீடு இராணுவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

3 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் குறித்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமயம் இராணுவத்தினர் இவ்வாறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சோதனை நடவடிக்கைகளின்போது எந்தவொரு பொருட்களும் இராணுவத்தினரால் மீட்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக தான் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.