ஜனாதிபதியும், பிரதமரும் கேட்டுக் கொண்டால் அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமரின் முன்பாக இந்த அறிவிப்பை விடுத்தார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது, தன் மீது எதிரணியால் சுமத்தப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நீண்ட விளக்கமளித்துள்ளார் அமைச்சர்.
தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு கோரியதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டது, தற்கொலையாளிகளான சகோதரர்களின் தந்தை இப்ராஹிம் ஹாஜியாருடனான உறவு குறித்து வெளியான செய்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த ரிசாத், அவை பொய்யானவை என்றார்.
ஜனாதிபதி, பிரதமர் கேட்டுக் கொண்டால் உடனடியாக பதவி விலக தயாராக இருக்கிறேன், எனது கட்சியின் இரண்டு பிரதியமைச்சர்களும் பதவி விலகி, அனைவரும் பின்வரிசையில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐ.தேக.வின் எம்.பிக்கள் சிலர் தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாகவும், இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேராவின் கருத்து கவலையளிப்பதாகவும், அது பிரதமரின் கருத்தை போலவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மறுத்த பிரதமர் அது தனது கருத்தல்ல என்றார். இந்த விவகாரத்தை ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என சமரம் செய்து, முடித்து வைத்தார்.