21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 7இல் கல்வி கற்கும் குறித்த மாணவர்கள் இன்று காலை வழமைபோன்று பாடசாலைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இதனையடுத்து கை மற்றும் முதுகு பகுதிகளில் அரிப்பு மற்றும் கொப்பழங்கள் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கல்லூரியில் குறித்த வகுப்பறையை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

எனினும் மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனவே மாணவர்களை விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி இதற்கான காரணங்களை கண்டறிய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களும் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பிரிவினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.