சிரியாவில் உயிரிழந்த இலங்கையரான ஐ.எஸ். பயங்கரவாதியின் கராத்தே குரு சிக்கினர்!

சிரியாவில் உயிரிழந்த இலங்கையரான ஐ.எஸ். பயங்கரவாதிக்கு கராத்தே கற்றுக்கொடுத்த கார்தே கரு பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவது, 2015 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மொஹம்மட் சப்ராஸ் நிலாம் அஹமட் என்பவருக்கு கராத்தே கற்றுக்கொடுத்த, சர்வதேச கராத்தே சங்கம் ஒன்றின் பிரதான பயிற்றுவிப்பாளர் துவான் அசார்தீன் சாலிஹீன் சல்தீன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இந் நிலையில் அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொண்ட அந்த அனுமதி கொழும்பு மேலதிக நீதிவானுக்கு இன்று நாரஹேன்பிட்டி பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவரை மீள ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மேர்பார்வைக்காக முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

துவான் மாஸ்டருடன் சேர்த்து மற்றொரு நபரும் தேசிய உளவுத்துறை ஆலோசனைக்கு அமைய கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர் செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக் காவலின் கீழ் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாத ஆதரவு பிரச்சாரங்களை செய்ததாக தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே 21/4 தற்கொலை தாக்குதலில் ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொலைபேசியில் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறி பம்பலபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் முபாரக் முப்ஷல் எனும் சந்தேக நபரையும் 90 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட தெஹிவளை ட்ரொபிகலின் தங்குவிடுதி தற்கொலை குண்டுதாரியான அப்துல் லதீப் ஜமேல் மொஹம்மட்டின் மாமனார் முறையிலான சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.