புகைப்படம் எடுக்க சென்ற தமிழ் ஊடகவியலாளர்களிடம் அத்துமீறிய கொகிளாய் பொலிஸ் பொறுப்பதிகாரி!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் நடத்தி இனவாத கருத்துக்களாலும் தகாத வார்த்தைகளாலும் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பேசி அச்சுறுத்தியுள்ளனர்.

பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவால் இரகசியமாக பொருத்தப்பட்டுள்ள CCTV காமெராக்களை அகற்றுமாறும் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்பலகையை மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என பெயர் மாற்றுமாறும் பொலிஸாருக்கு இன்றையதினம் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட பொலிஸார் இன்றையதினமே அதனை நடைமுறைப்படுத்துவதாக நீதிமன்றில் தெரிவித்ததோடு இன்றையதினம் மாலை 4 மணியளவில் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து பெயர் பலகையை அகற்றி நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றும் வேலையை செய்துகொண்டிருந்தனர்.

இந்த சம்பவங்களை செய்தி அறிக்கையிடலுக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சமயம் அங்கே கடமையில் நின்ற கொக்கிளாய் பொலிஸ் பொறுப்பதிகாரி புகைப்படம் எடுத்தவரை கையால் தாக்கி மிகவும் கீழ்த்தனமான தூஷண வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மேலும், ஊடகப்பணியையும் கேவலப்படுத்தும் விதமாக தூசணத்தால் பேசியதோடு உடனடியாக அங்கே கடமையிலிருந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து என்னை தமது கைத்தொலைபேசிகளால் துரத்தி துரத்தி புகைப்படம் எடுத்ததோடு பொய் சொல்லும் தமிழ் ஊடகவியலாளர்கள் என தீட்டியதோடு இங்கே நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் பொய்யாக நான் செய்தி எழுதுவதாக கேவலமாக பேசியிருந்தார்.

தாக்குதல் சம்பவம் பெரிய அளவில் இடம்பெறவில்லை தாக்குதல் சம்பவங்களால் எந்தவித காயங்களோ பாதிப்புக்களோ இல்லை நான் தற்போது நலமாக உள்ளதாக தாக்குதலுக்கு உள்ளன ஊடகவியலாளர் குமணன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பிள்ளையார் ஆலயத்தில் நின்ற தமிழ் மக்களை பிக்குவின் முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸார் ஆலயத்துக்கு வந்து அங்கே அவர்களை நிலத்தில் அமர வைத்து குற்றவாளிகளை போன்று பதிவுகளை மேற்கொண்டு விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த செய்திகள் தொடர்பான பத்திரிக்கை ஆதாரங்கள் இன்று மன்றில் வழக்கின் ஆதாரமாக காண்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் மாலை இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.